இன்று வாக்குறுதி மீறுதல் என்பது தாய், தகப்பன், கணவன், மனைவி என்ற உறவு முறைகளிலும் தொழிலாளி, முதலாளி, ஏழை, பணக்காரன், நண்பன் என்ற அனைத்து மட்டங்களிலும் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.அதை ஒரு பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை.இதனால் ஏற்படும் விளைவுகள் ஏராளம்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளியைக் காப்பாற்ற மருத்துவர் வரவில்லையென்றால் நோயாளியின் உயிர் போகிறது. நேரம் தவறி பேருந்து நிலையத்திற்கோ இரயில்வே ஸ்டேஷனுக்கோ நாம் சென்றோம் என்றால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாமல் போகிறது. இதனால் நம்மை நம்பி, காத்துக் கொண்டிருப்பவர்களின் நேரமும் காலமும் பொருளும் பணமும் விரையமாகிறது. இதனால் நம்மீதுள்ள நம்பிக்கை பிறரிடத்தில் குறைந்துவிடுகிறது. இந்த வாக்குறுதி மீறுவதால் நம்முடைய வாழ்வில் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இன்னும் சொல்லப் போனால் தவ்ஹீதைப் பேசக்கூடிய நம்மவர்கள் வாக்கு மீறுவதை அல்வா சாப்பிடுவதைப் போல நினைக்கிறார்கள். ஆலோசனைக் குழு இத்தனை மணிக்கு நடக்கும் என அறிவித்துவிட்டு அவர்கள் இஷ்டத்திற்கு ஒரு நேரத்தில் வருவார்கள், ஒரு காரியத்திற்கு வாக்களித்து விட்டு, இதோ செய்து முடித்து தருகிறேன் என்பார்கள். ஆனால் ஒருக்காலும் அந்த வேலையை முடித்துத் தந்தபாடிருக்காது.இவ்வாறு வாக்குறுதி கொடுத்து மாறு செய்பவர்களுக்கு நபியவர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறார்கள்.
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்.அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி (33)