அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 30 நவம்பர், 2012

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -4)

உடுத்தி மகிழவில்லை

அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன. 
மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி 'இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்' என்று குறிப்பிட்டார். நூல் : புகாரி 3108, 5818

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி போர்வை ஒன்றைக் கொண்டு வந்து 'இதை உங்களுக்கு அணிவிப்பதற்காக என் கையால் நெய்து கொண்டு வந்துள்ளேன்' என்றார். அவர்களுக்கு அது தேவையாக இருந்ததால் அதைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதை வேட்டியாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தனர் என ஸஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்.நூல் : புகாரி 1277, 2093, 5810

போர்வையை வேட்டியாக அணிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உடை பற்றாக்குறை இருந்துள்ளது என்பதையும், உபரியாக ஒரு ஆடை இருந்தால் நல்லது என்று ஆடையின் பால் தேவை உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.மேலும் உடனேயே அதை வேட்டியாக அணிந்து கொண்டதிலிருந்து எந்த அளவுக்கு அவர்களுக்கு ஆடைத் தட்டுப்பாடு இருந்துள்ளது என்பதையும் இந்த நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

செவ்வாய், 27 நவம்பர், 2012

வரதட்சணைக் கொடுமையும் நிரந்தர நரகமும்

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்கள் ஏற்கனவே இருந்து வந்த மதக் கலாச்சாரங்களிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை.விட்ட குறை தொட்ட குறை என்பது போல், தாங்கள் விட்டு வந்த கலாச்சாரங்களை இஸ்லாத்திற்கு வந்த பின்பும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் திருக்குர்ஆனோ இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றச் சொல்கின்றது.

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.
(அல்குர்ஆன் 2:208)

பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஏதோ ஒப்பு சப்புக்காக இஸ்லாமிய கடமைகளில் ஒன்றிரண்டைப் பின்பற்றி விட்டு மற்றவற்றில் தங்கள் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் நடந்து கொள்கின்றனர்.இவ்வாறு சொந்த விருப்பங்களின் அடிப்படையில் நடக்கக் கூடிய விஷயங்களில் ஒன்று தான் வரதட்சணை! இந்த வரதட்சணை மற்றும் அதனால் ஏற்படும் சமூகக் கொடுமைகளை எதிர்த்து, தவ்ஹீது ஜமாஅத் போரிடுவது போன்று வேறெந்த ஜமாஅத்தும் போரிடவில்லை என்று அடித்துச் சொல்லலாம்.

எத்தனையோ இளைஞர்கள் இந்தப் பிரச்சாரத்தால் கவரப்பட்டு, மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன் வந்தது, இன்னும் முடித்துக் கொண்டிருப்பது, ஏற்கனவே திருமணம் முடித்தவர்கள் தாங்கள் பெண் வீட்டில் வாங்கிய பொருட்களைத் திருப்பிக் கொடுப்பது போன்ற காரியங்களெல்லாம் நடப்பது ஒரு சரித்திர மாற்றமாகும். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மறுமை பயம் தான்! அந்த மறுமை பயத்தைப் பிரச்சாரத்தின் போது ஊட்டியதால் தான் இந்த மாற்றமும் மறுமலர்ச்சியும்!

இதனுடைய முன்னேற்றம் தான் வரதட்சணை திருமணத்தை மக்கள் புறக்கணிக்க முன்வந்த காரியம்! எத்தனையோ சகோதரர்கள் தங்களின் சொந்த சகோதரர்களின் திருமணத்தைக் கூட புறக்கணித்து விட்டு, சாப்பிடாமல் பட்டினி கிடக்கும் இந்தப் போரட்ட உணர்வு, புரட்சித் தீ தொடர்ந்து பற்றி எரியுமானால் இன்ஷா அல்லாஹ் பெருமளவில் இந்த வரதட்சணை எனும் கொடுமையை சுட்டுப் பொசுக்கலாம். ஆனால் இதை ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களே சரியாகப் பேணுவது கிடையாது.இந்த வரதட்சணை ஏற்படுத்திய மோசமான விளைவுகளைப் பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவுக்குத் தீமை என்று வெளிப்படையாகத் தெரியும் விஷயம் தான் வரதட்சணை!

திங்கள், 26 நவம்பர், 2012

தெருமுனைப் பிரச்சாரம்

அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ஆயங்குடி கிளை சார்பாக தெருமுனைப்பிரச்சாரம் கடந்த வெள்ளியன்று (23.11.12) மக்ரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்றது.முஸ்லிம்களும், சில பிறமதத்தவர்களும் ஒன்றாக வசிக்கும் இந்த பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் போன்ற நிகழ்ச்சிகள் நடப்பது இதுவே முதல் முறை அல்ஹம்துலில்லாஹ்.மின்சாரம்  இல்லாத அந்த நேரத்திலும், ஆயங்குடி தவ்ஹீத் பள்ளியின் இமாம்,  முஹம்மத் அவர்கள் தெளிவான முறையில், ஆனித்தரமாக தங்கள் உரையை நிகழ்த்தினார்கள்.எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே..!





























சத்தியத்தின் முகம்

“தங்களுக்கு அல்லாஹ் வானுலகிலிருந்து ஒருவாள் வழங்கியதாகவும், அதனை அவர்கள் தங்களிடம் கொடுத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். இது உண்மையா?” “உண்மை இல்லை” – காலித் இப்னுவலீத் (ரலி) பதில் பகர்ந்தார்கள்.

“அப்படியானால் தங்களை ‘அல்லாஹ்வின் வாள்’ என்று அழைப்பதற்கு என்ன காரணம்?”

-மேற்கண்டகேள்விகளைக் கேட்டது கிறிஸ்தவப் படையைச் சேர்ந்த ஜூர்ஜா என்பவர்.

இடம்: யர்முக் யுத்தம்.

அணி வகுத்திருந்த கிருஸ்தவப் படையிலிருந்து வெளியே வந்த ஜூர்ஜா, முஸ்லிம் படைத் தலைவர் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைச் சந்திக்கவேண்டும் என்று கோரினார். ஜூர்ஜாவை காலித் அவர்கள் சந்தித்தார். ஜூர்ஜா பேச ஆரம்பித்தார்.

“காலித்! தாங்கள் உண்மையை மட்டுமே சொல்லவேண்டும். காரணம், தாங்கள் சுதந்திர மனிதர். சுதந்திர மனிதர்கள் பொய் சொல்வதில்லை. தாங்கள் ஏமாற்றவும் கூடாது. காரணம் கண்ணியமிக்கவர்கள் ஏமாற்றமாட்டார்கள்.”

தாங்கள் என்ன வேண்டுமானலும் கேட்கலாம் என்றபொருளில் காலித் (ரலி) ஜூர்ஜாவைப் பார்த்தார். காலித் (ரலி) அவர்களை ‘அல்லாஹ்வின் வாள்’ என்று அழைப்பதற்கு என்ன காரணம் என்பதுதான் ஜூர்ஜாவின் முதல் கேள்வியாக இருந்தது.

வியாழன், 1 நவம்பர், 2012

குர்ஆனின் சிறப்புகள்!


காலமாற்றங்கள் அல்குர்ஆனை காணடிக்க முடியவில்லை. எல்லா காலங்களையும் வென்றதாக எக்காலத்துக்கும் உகந்ததாக திருமறைக்குர்ஆன் ஜீவனோடு பிரகாசிக்கின்றது. விஞ்ஞானயுகம், கம்ப்யூட்டர்யுகம் என்றெல்லாம் ஏதேதோ யுகங்கள் மாறிமாறி வந்தாலும் அந்த யுகங்களால் குர்ஆனை பொய்ப்பிக்க முடிவதில்லை. நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் 1400 ஆண்டுகளுக்கு முன் இறக்கியருளப்பட்ட மகத்தான நுண்ணறிவாளனாகிய அல்லாஹ்வின் வாக்காகிய இந்தக் குர்ஆனை மெய்ப்படுத்தும் சேவையைத்தான் செய்துவருகின்றன.

உலகில் ஏற்படும் அரசியல் மாற்றங்களும் ஆட்சி மாற்றங்களும் திருமறைக் குர்ஆனுக்கு எந்த பாதிப்பையும் இதுநாள்வரை ஏற்படுத்த முடியவில்லை. ஒரு கொள்கையைக் கொண்டவர் அரசுக்கட்டிலில் ஏறினால் தனக்கு வேண்டாத, எதிரான கொள்கையையும் அது சம்பந்தமானவைகளையும் அழித்து விடுவதோடு அவற்றை பின்பற்றும் மக்களையும்; கேவலப்படுத்தி விடுவர். ஆனால் அப்படிப்பட்ட அவர்களால் திருக்குர்ஆனை ஒன்றும் செய்யமுடியவில்லை. 

இன்றைக்கு உலகிலிருக்கும் வல்லரசுகள் இஸ்லாத்தையும், அதைப் பின்பற்றும் மக்களையும் தீவிரவாதிகளாக, தீண்டத்தகாதவர்களாக சித்தரித்த போதும் திருமறைக் குர்ஆனை அவர்களால் காயப்படுத்த முடியவில்லை. மாறாக கலங்கியிருக்கும்; தன் சமுதாய மக்களை இன்றும் அது காத்து நிற்கும் அரணாக இருப்பதுடன், களங்கம் சுமத்தும் வல்லரசுகளுக்கு கண்ணியமிக்க பதிலடி கொடுத்து கதிகலங்கச் செய்கிறது. தானும் தன்னை உண்மையாகப் பின்பற்றும் மக்களும் அறவழியில் நிலைத்திருப்பவர்கள் என்று உலக அரசாங்கங்களுக்கு ஓங்கி உரத்துச் சொல்கிறது இந்த திருமறைக் குர்ஆன். இதற்காக அதற்கு எந்தவொரு அரசாங்கத்தின் துணையோ, படைபலமோ ஆதரவாக இல்லை. இதிலிருந்தே குர்ஆன் வல்லமையும், புகழுக்குமுரிய அல்லாஹ்வின் வாக்கு என்பதற்கு வலுவான அத்தாட்சியல்லவா?! 

வல்ல ரஹ்மான் இறக்கியருளிய அல்குர்ஆனைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் இக்குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பலர் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். போலியான மதங்களில் இருப்பவர்கள் கூட தங்களுடைய வேதத்தைப் பற்றி அறிந்து அதன்படி செயல்படுகிறார்கள். ஆனால் முஸ்லிம்களோ வெறும் பெயர் தாங்கிகளாகவே இருந்து வருகின்றார்கள். அப்படி இருப்பவர்கள் அந்தத் தன்மையிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்!