அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

ஞாயிறு, 24 ஜூலை, 2011

நார்வே பயங்கரம்: இஸ்லாமிய எதிர்ப்புணர்வால் தாக்குதலை நடத்திய வாலிபர்!

ஓஸ்லோ: நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நார்வேயைச் சேர்ந்த இவர் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு காரணமாக இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது.

ஓஸ்லோவில் இவர் நடத்திய ஒரு குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 92 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக ஆண்ட்ரெஸ் பெஹ்ரிங் பிரேவிக் (32) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வலதுசாரிக் கொள்கைகளில் தீவிரமான இவர் இஸ்லாமிய எதிர்ப்பாளர் என்று தெரியவந்துள்ளது.

இவர் தனது இன்டர்நெட் பிளாக்கில் முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை வெளியிட்டுள்ளார். மேலும் நார்வே உள்பட ஐரோப்பிய நாடுகளில் முஸ்லீம்கள் குடியேறுவதை எதிர்ப்பதாகவும், பல்வேறு இனங்கள் இணைந்து வாழ்வதை எதி்ர்ப்பதாகவும் தனது பிளாக்கில் இவர் கூறியுள்ளார்.

ஐரோப்பாவில் இனப் போர் துவங்க வேண்டும் என்றும், அதன்மூலம் ஐரோப்பியர் அல்லாதவர்களும், கம்யூனிஸ்டுகளும் வெளியேற்றப்பட்டு ஐரோப்பா தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் இவர்.

இவருக்கு வலதுசாரி தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

ஓஸ்லோவில் இவர் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் முகாமை நடத்தியது அந் நாட்டு ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி அரசு என்பது குறிப்பிடத்தக்கது. இக் கூட்டத்தில் நார்வே பிரதமர் ஸ்டோல்ட்பெர்க் உரையாற்ற வர இருந்த நிலையில், போலீஸ் உடையில் வந்த பிரேவிக் துப்பாக்கிச் சூடு நடத்தி ஏராளமானோரை கொன்று குவித்தார்.

முன்னதாக பிரேவிக் நடத்திய குண்டுவெடிப்பும் ஆளும் கட்சியை குறி வைத்தே இருந்தது. ஓஸ்லோவிலுள்ள பிரதமர் அலுவலகத்தைக் குறிவைத்து அவர் நடத்திய குண்டுவெடிப்பில் 28 பேர் வரை பலியாயினர்.

இந்த இரு தாக்குதல்களிலும் பிரதமர் ஸ்டோல்ட்பெர்க் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தட்ஸ்தமிழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக