அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 15 டிசம்பர், 2011

இராக்கிலிருந்து வெளியேறின அமெரிக்கப் படைகள்- 9 ஆண்டு போர் முடிந்ததாக அறிவிப்பு!

பாக்தாத்: இராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த 9 ஆண்டு காலப் போர் அதிகாரப்பூர்வமாக இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதையடுத்து பாக்தாதில் அமெரிக்கா அமைத்த ராணுவ மையத்தில் இன்று அமெரிக்கக் கொடி இறக்கப்படவுள்ளது.

இராக்கில் அதிபர் சதாம் ஹூசேன் அணு ஆயுதம் தயாரிப்பதாக பொய் கூறிக் கொண்டு 2003ம் ஆண்டு மார்ச் மாதம் போர் தொடுத்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். ஆனால், அங்கு எந்த அணு ஆயுதமும் சிக்கவில்லை.

இந்தப் போரில் சதாமின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு, 2003ம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டு, பின்னர் தூக்கில் போட்டு கொலையும் செய்யப்பட்டார் சதாம். அவரது மகன்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளும் கொன்று குவிக்கப்பட்டனர். சதாமின் மனைவி, மகள் உள்ளிட்டோர் மட்டும் தப்பி ஜோர்டானில் தஞ்சம் புகுந்தனர்.

2007ம் ஆண்டு போர் மிக உச்சத்தில் இருந்தபோது மிக அதிகபட்சமாக சுமார் 1.7 லட்சம் அமெரிக்கப் படைகள் இராக்கில் இருந்தன. இந்தப் போரில் சுமார் 1 லட்சம் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் 4,500 அமெரிக்க வீரர்களும் பலியாயினர். 30,000 வீரர்கள் காயமடைந்தனர்.

இந்தப் போருக்காக அமெரிக்கா செலவிட்ட தொகை ரூ. 45 லட்சம் கோடியைத் தாண்டும். மொத்தத்தில் சுமார் 15 லட்சம் அமெரிக்க வீரர்கள் இராக் போரில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சதாம் கொல்லப்பட்டு அங்கு தேர்தலும் நடத்தப்பட்டு அமெரிக்க ஆதரவுடனான அரசும் அமைக்கப்பட்டது. அல்-மாலிகி இப்போது பிரதமராக உள்ளார்.

இந் நிலையில் இராக் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும், படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் அமெரிக்காவில் அதிகரித்தன. இதையடுத்து 2011ம் ஆண்டு இறுதிக்குள் படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அதிபர் ஒபாமாவும் அமெரிக்கப் படைகளின் வாபஸ் வேகப்படுத்தப்படும் என்று அறிவித்து பெரும்பாலான படைகளை திரும்பப் பெற்றுவிட்டார்.

கடைசியாக சுமார் 5,500 வீரர்கள் மட்டும் இராக்கில் இருந்தனர். இவர்களும் நாடு திரும்புவதற்காக குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களுக்கு வர ஆரம்பித்துவிட்டனர். அடுத்த சில வாரங்களில் இவர்களும் அமெரிக்கா திரும்பிவிடுவர்.

அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் முன் சுமார் 8 லட்சம் இராக்கியர்களைக் கொண்ட புதிய ராணுவத்தை அமெரிக்கா உருவாக்கி பயிற்சியும் அளித்தது. இப்போது இவர்கள் கையில் தான் இராக் நாட்டின் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இராக் ராணுவத்திடம் இப்போது போதுமான ஆயுதங்களோ அடிப்படைக் கட்டமைப்போ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இராக் விமானப் படையிடம் மொத்தமே 3 சிறிய விமானங்கள் தான் உள்ளன. இதனால் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த இராக் ராணுவத்தையும் விமானப் படையையும் மேம்படுத்தியாக வேண்டும். இதற்கு ஏராளமான செலவு பிடிப்பதோடு நெடுங் காலமும் தேவைப்படும்.

அமெரிக்கப் படைகள் வெளியேறுவதை பெரும்பாலான இராக்கியர்கள் வரவேற்றாலும், நாட்டில் உள்நாட்டுப் போர் வெடிக்கலாம், தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

இராக்கில் 50 சதவீதம் பேர் ஷியா இனத்தினரும், 40 சதவீதம் பேர் சன்னி இனத்தினரும் உள்ளனர். இவர்கள் தவிர குர்த் உள்ளிட்ட பிற இனத்தினரும் வசிக்கின்றனர். சதாம் ஹூசேன் காலத்தில், பெரும்பாலாக உள்ள ஷியா இனத்தினரை சன்னி பிரிவினர் ஒடுக்கி ஆண்டு வந்தனர்.

இப்போது ஷியா பிரிவினரிடம் தான் ஆட்சி உள்ளது. இதனால் அரசுக்கு எதிராக சன்னி பிரிவினர் தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சமும், இதை ஒடுக்க அரசுக்கு ஷியா பிரிவினரை அதிகமாகக் கொண்ட ஈரான் உதவலாம், பதிலுக்கு சன்னி பிரிவினருக்கு ஆதரவாக செளதி அரேபியா மறைமுகமாக களமிறங்கலாம் என்ற அச்சமும் உள்ளது.

அமெரிக்கப் படைகள் வாபஸ் ஆவதையொட்டி இராக்கின் பல இடங்களில் அமெரிக்கக் கொடிகளை எறித்து மக்கள் கொண்டாடங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.
நன்றி : தட்ஸ்தமிழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக