அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

இறையில்லத்தில் பேணவேண்டிய ஒழுங்குகள் (பகுதி - 4)

காணாமல் போன பொருளை பள்ளியில் அறிவிக்கலாமா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காணாமற்போன ஒரு பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக்கொண்டிருப்பவரின் குரலைச் செவியுறுபவர் அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக் கிடைக்காமல் செய்வானாக!என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை.
இதை அபூஹுரைரா (ரலி­) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லி­ம் 981

மேற்கண்ட ஹதீஸ் நாம் ஏதேனும் ஒரு பொருளை தொலைத்து விட்டால் அதனை பள்ளியில் அறிவிப்பு செய்யக்கூடாது என்பதை தெரிவிக்கின்றது. மீறி அறிவிப்பு செய்பவர்களிடம் அப்பொருளை உனக்கு இறைவன் கிடைக்காமல் செய்வானாக என்று கூறுமாறும் நபிகளார் அறிவுறுத்துகின்றார்கள்.இதனை நபிகள் நாயகம் நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளார்கள்.


(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் ஒரு மனிதர் எழுந்து ”(காணாமற் போன எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?” என்று கேட்டார்.  அப்போது நபி (ஸல்) அவர்கள், ”(உனது ஒட்டகம்) உனக்குக் கிடைக்காமற் போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ர­லி) முஸ்லி­ம் 983



இந்த செய்திகள் பள்ளியில் ஏதேனும் பொருளை தொலைத்து விட்டால் அதை அறிவிப்பு செய்வதை தடுக்காது. மாறாக வெளியில் காணாமல் போன பொருளை பள்ளியில் அறிவிக்ககூடாது என்பதையே இந்த ஹதீஸ் கூறுகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.பொதுவாகவே அறிவிப்பு செய்வதை இந்த செய்தி தடுக்கின்றது என்று விளங்கினால் பள்ளியில் தொழ வருபவர்கள் சில பொருளை தொலைத்திருப்பார்கள். அப்பொருள் அவர்களை போய் சேர்வதற்கு வழியில்லாமல் போய்விடும்.

பள்ளியில் வியாபாரம் செய்தல் கூடாது

இஸ்லாம் வர்த்தகத்திற்கு எதிரானதல்ல. இஸ்லாமியர்களை வியாபாரம் செய்ய அது தூண்டவே செய்கின்றது. இருப்பினும் தனியோனை துதிப்பதற்காக எழுப்பப்பட்ட ஆலயத்தில் வர்த்தகம் நுழைந்து விடக்கூடாது, இறையில்லத்தின் நோக்கம் பாழ்ப்படுத்தப்படக் கூடாது என்பதால் பள்ளியில் வியாபாரம் செய்வதை இம் மார்க்கம் தடை செய்கின்றது. வியாபார ரீதியிலான எந்த வித கொடுக்கல் வாங்கலையும் பள்ளியில் வைத்துக் கொள்ளக் கூடாது இதை பின்வரும் நபிமொழியி­ருந்து அறியலாம்.

பள்ளிவாச­ல் விற்பவரையோ, வாங்குபவரையோ கண்டால் அல்லாஹ் உன்க்கு லாபத்தை தராமல் இருப்பானாக என்று கூறுங்கள்
அறிவிப்பவர் : அபுஹூரைரா ர­லி, திர்மிதி 1242

பள்ளி நிர்வாகம் தொடர்பான கொடுக்கல் வாங்கலாக இருந்தால், மஸ்ஜித் நிர்வாகத்திற்கு இலாபம் கிடைக்கும் என்றிருந்தால் அதை பள்ளியில் செய்வது குற்றமாகாது. இது போன்றதொரு செயலை நபிகளார் பள்ளியில் செய்துள்ளார்கள் என்பதற்கு ஹதீஸில் ஆதாரம் உள்ளது.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர­லி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் ஓர் அறப்போருக்குப் புறப்பட்டுச் சென்றேன். (போரை முடித்து நாங்கள் திரும்பியபோது) எனது ஒட்டகம் களைத்து பலமிழந்துபோனதால் என்னைத் தாமதப் படுத்திவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து ஜாபிர்(தானா)?’ என்று கேட்டார்கள். நான் ஆம்என்றேன். என்ன விஷயம் (ஏன் தாமதம்)?” என்று கேட்டார்கள். எனது ஒட்டகம் களைத்துப் பலமிழந்துபோனதால் நான் பின்தங்கிவிட்டேன்என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வாக னத்திரிருந்து) கீழே இறங்கி, முனைப் பகுதி வளைந்த தமது கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்திவிட்டார்கள். பிறகு ஒட்டகத்தில் ஏறுஎன்றார்கள். நான் ஒட்டகத்தில் ஏறினேன். (அது விரைந் தோடியது.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்திவிடாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நீ திருமணம் செய்து கொண்டாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம்என்றேன். அதற்கு, ”கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?” என்று கேட்டார்கள். நான் இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்து கொண்டேன்)என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”கன்னிப் பெண்ணை மணந்து கொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே?” என்று கேட்டார்கள். நான், ”எனக்குச் சகோதரிகள் சிலர் உள்ளனர். அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலை வாரி, அவர்களைப் பராமரிக்கக்கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”இப்போது நீ ஊருக்குச் செல்லப்போகிறாய். ஊர் சென்றதும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்; புத்திசாலித் தனமாக நடந்துகொள்என்று கூறிவிட்டு, ”உனது ஒட்டகத்தை (எனக்கு) விற்றுவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். நான் சரிஎன்றேன். அவர்கள் என்னிடமிருந்து ஓர் ஊக்கியாவிலை பேசி அதை வாங்கிக்கொண்டார்கள். (தொடர்ந்து ஊர் வந்து சேரும்வரை அதிலேயே நான் வந்தேன்.)

(எனக்கு முன்பே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்குச்) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள்தான் சென்றடைந்தேன். நான் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டேன். இப்போது தான் வருகிறாயா?” என்று என்னிடம் கேட்டார்கள். நான் ஆம்என்றேன். உனது ஒட்ட கத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுஎன்று சொன்னார்கள். அவ்வாறே நான் உள்ளே சென்று தொழுது விட்டுத் திரும்பிவந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்காக ஓர் ஊக்கியாஎடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச் சற்று தாராளமாகவே நிறுத்(துத் தந்)தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்றபோது ஜாபிரை எனக் காக அழைத்துவாஎன்றார்கள். அவ்வாறே நான் அழைக்கப்பட்டேன். நான் (என் மனதிற்குள்) இப்போது எனது ஒட்டகத்தை எனக்கே திரும்பத் தந்துவிடுவார்களோ! அ(வ்வாறு ஒட்டகத்தையும் வாங்கிக்கொண்டு விலையையும் பெற்றுக்கொண்டு நபியவர்களைச் சிரமப் படுத்துவ)தைவிட வெறுப்பானது எனக்கு வேறொன்றுமில்லைஎன்று கூறிக்கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”உனது ஒட்டகத்தை நீயே எடுத்துக்கொள்; அதன் கிரயமும் உனக்கேஎன்றார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் ரலி­
முஸ்லி­ம் 2909

ஜாபிர் ரலி­ அவர்களுடைய ஒட்டகத்தை, தான் விலைக்கு வாங்கிக் கொள்வதாக வெளியில் வைத்து நபியவர்கள் வாக்குறுதியளிக்கின்றனர். ஆனால் ஒட்டகத்தை உடன் பெற்றுக் கொள்ளவில்லை. அதற்குரிய விலையையும் ஜாபிரிடம் அளிக்கவில்லை.
மறுநாள் ஜாபிர் பள்ளிக்கு வருகின்றார்கள். இந்த நேரத்தில் தான் ஒட்டகத்திற்குரிய விலையை ஜாபிர் அவர்களுக்கு கொடுக்கின்றார்கள். நபிகளார் பள்ளியில் வைத்து ஜாபிர் ரலி­ அவர்களுடைய ஒட்டகத்தை வாங்கி, பிறகு அவருக்கே அன்பளிப்பு செய்து விடுகின்றனர். வெளியில் பேசிய வியாபாரத்தை பள்ளியில் முடித்துள்ளார்கள் என்பதே இதன் பொருள்.
இந்த செய்தியை நபிகளாரின் கூற்றுக்கு முரணாக புரியாமல் பள்ளி நிர்வாகம் தொடர்புடையதாக இருக்கும் எனில் அதை பள்ளியில் வாங்குவதோ விற்பதோ எந்த குற்றமும் இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.


இணை கற்பித்தல் கூடாது
பள்ளிவாசல் என்பது இறைவன் மட்டும் வணங்கப்பட வேண்டிய இடம். இந்நோக்கத்திற்காக தான் ஊர்கள் தோறும் பள்ளிவாசல்கள் எழுப்படுகின்றன. ஆனால் இந்நோக்கத்திற்கே முரணாக இறைவனல்லாத, அவனால் படைக்கப்பட்ட சாதாரண அடியார்களையும் இறையில்லத்தில் வைத்து அனேக இஸ்லாமியர்கள் வழிபடுகின்றனர்.
அவ்­லியாக்களின் மீதுள்ள குருட்டுப் பக்தியினால் அவர்களின் பெயரில் மவ்லூ­த் ஓதுகின்றனர். பள்ளியில் வைத்தே அவர்களை அழைத்து பிரார்த்திக்கின்றனர். இன்னும் இறையில்லத்தின் நோக்கத்திற்கே வேட்டு வைக்கும் எண்ணற்ற இணைவைப்புகளை பள்ளியில் அரங்கேற்றுகின்றனர். இதைத்தான் இறைவன் பின்வரும் வசனத்தில் வன்மையாக கண்டிக்கின்றான்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
அல்குர்ஆன் 72 : 18

பிரார்த்தனையின் மூலமோ மற்ற காரியங்களின் மூலமோ இறைவனல்லாத ஏனையோர் இறையில்லத்தில் வணங்கப்பட்டால் அது பள்ளிவாசல் என்ற தகுதியை இழந்து விடுகின்றது என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறோம். இறையில்லம் என்பதற்கு என்ன தகுதி அவசியம் இருந்தாக வேண்டுமோ அதையே இழந்து விடுகின்றன. எனவே  இது போன்ற பெயர் தாங்கி பள்ளிகளுக்கு இறைவனை வணங்கும் நோக்கில் செல்லாதீர்.

நன்றி : கடையநல்லூர் அக்ஸா  
                 & 
அப்துல் கரிம் மேளப்பாளையம் இஸ்லாமியக் கல்லூரி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக