அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

நிய்யத்

எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: புகாரீ 1)

தொழுகையானாலும் நோன்பானாலும் இன்ன பிற வணக்கங்களானாலும் அவற்றுக்கு நிய்யத் மிகவும் அவசியமாகும். நிய்யத் என்றால் என்ன? இதைப் பற்றியும் பெரும்பாலான மக்கள் அறியாதவர்களாகவே உள்ளனர்.

குறிப்பிட்ட சில வாசகங்களை வாயால் மொழிவது தான் நிய்யத் என இவர்கள் நினைக்கின்றனர். பல காரணங்களால் இவர்களது நினைப்பு தவறானதாகும்.

நிய்யத் என்ற வார்த்தைக்கு மனதால் எண்ணுதல் தீர்மானம் செய்தல் என்பது பொருளாகும். வாயால் மொழிவது என்ற அர்த்தம் இந்த வார்த்தைக்கு இல்லை.

ஒருவருக்குக் காலையில் எழுந்தது முதல், இரவு வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. நோன்பைக் கடைபிடிக்க வேண்டிய நேரம் முழுவதும் எதையும் உண்ணாமல் பருகாமல் குடும்ப வாழக்கையில் ஈடுபடாமல் இருந்துள்ளார். ஆனால் நோன்பு வைப்பதாக இவர் எண்ணவில்லை. ஏதாவது கிடைத்தால் சாப்பிடிருப்பார். நோன்பாளியைப் போலவே இவர் எதையும் உட்கொள்ளா விட்டாலும் நோன்பு நோற்கும் தீர்மானம் எடுக்காததால் இவர் நோன்பு வைக்கவில்லை. இவ்வாறு மனதால் முடிவு செய்வது தான் நிய்யத் எனப்படுகிறது.

ஒருவர் ரமளான் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக நான்கு மணிக்கு எழுகிறார். வழக்கத்திற்கு மாறாக இந்த நேரத்தில் சாப்பிடுகிறார். நோன்பு நோற்கும் எண்ணம் அவரது உள்ளத்தில் இருப்பதன் காரணமாகவே இவர் இப்படி நடந்து கொள்கிறார். எனவே இவர் நிய்யத் செய்துவிட்டார். இன்னும் சொல்வதாக இருந்தால் இரவில் படுக்கும் போதே ஸஹருக்கு எழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் படுக்கிறார்.

இதுதான் நிய்யத்! இதற்கு மேல் வேறு ஒன்றும் தேவையில்லை. ஸஹர் செய்துவிட்டு நோன்பு நோற்பதாக மனதில் உறுதி செய்யவேண்டும் என்பதே சரியானதாகும்.ஆனால் நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட வாசகத்தைக் கூறுவதற்கு நிய்யத் என்று நாமகரணம் சூட்டிவிட்டனர்.

நவைத்து ஸவ்ம கதின் அன்அதாயி பர்ளி ரமளானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா என்பது தான் அந்தக் குறிப்பிட்ட வாசகம்.

இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் பர்லான நோன்பை அதாவாக நாளைப் பிடிக்க நிய்யத் செய்கிறேன் என்று தமிழாக்கம் வேறு செய்து அதையும் கூற வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

இந்த வாசகத்தைக் கூற வேண்டுமென்று அல்லாஹ் கூறினானா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறினார்களா? அதுவுமில்லை. அவர்களிடம் பாடம் கற்ற நான்கு கலீபாக்களோ ஏனைய நபித் தோழர்களோ இவ்வாசகத்தைக் கூறினார்களா? என்றால் அதுவும் இல்லை.நான்கு இமாம்களாவது இவ்வாறு கூறியுள்ளார்களா? என்றால் அதுகூட  இல்லை. உலகில் எல்லா நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

 
எங்கேயும் இந்த வழக்கம் இல்லை. இந்தியாவிலும் இந்தியர்கள் போய்க் கெடுத்த இலங்கை போன்ற நாடுகளிலும் தவிர வேறு எங்கும் இந்த வழக்கம் இல்லை.நிய்யத் என்பதன் பொருள் மனதால் நினைத்தல் என்பதாலும் நபிகள் நாயகம(ஸல்) அவர்கள் இதைக் கற்றுத் தராததாலும் இதை விடடொழிக்க வேண்டும்.
யாரேனும் நமது கட்டளை இல்லாமல் ஒரு அமலைச் செய்வாரேயானால் அது நிராகரிக்கப் படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (3243)

மேலும் நிய்யத் என்ற பெயரில் சொல்லித் தரப்படும் வாசகத்தின் பொருளைச் சிந்தித்தால் கூட அது இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரானதாகவே உள்ளது.
ரமாளன் மாதத்தின் பர்லான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத் செய்கிறேன் என்பது இதன் பொருள்.

இஸ்லாமிய அடிப்படையில் ஒரு நாள் என்பது மஃரிபிலிருந்து ஆரம்பமாகிறது. இஸ்லாம் பற்றிய அறிவு பெரிய அளவில் இல்லாதவர்கள் கூட நாளை வெள்ளிக்கிழமை என்றால் வியாழன் பின் நேரத்தை வெள்ளி இரவு என்றே கூறும் வழக்கமுடையவர்களாக உள்ளனர்.

ஒருவர் ஸஹர் நேரத்தில் நாளை பிடிப்பதாக நிய்யத் செய்கிறார். ஆனால் உண்மையில் இன்று தான் நோன்பு நோற்கிறாரே தவிர நாளை அல்ல. ஏனெனில் ஸஹரைத் தொடர்ந்து வரக்கூடிய சுபுஹ் இன்று தானே தவிர நாளை அல்ல.இதைச் சிந்தித்தால் கூட இது மார்க்கத்தில் உள்ளது அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எனவே இது போன்ற நவீன கண்டுபிடிப்புகளை விட்டுவிட்டு அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த முறைப்படி மனதால் நோன்பு நோற்பதாக உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே நிய்யத் எனப்படும்.

நன்றி :  Onlinepj.com& islamicdvd

0 கருத்துகள்:

கருத்துரையிடுக