அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 17 ஜூன், 2011

பெற்றோர்களே..!குழந்தைகளின் உடல்நலனை கவனியுங்கள்..!

இதய நோய்கள் மற்றும் மாரடைப்பால் உலகில் பெரும்பாலனவர்கள் அவதிப்படுவதாக மருத்துவ சான்றுகள் கூறுகின்றன. ஆரோக்கியமான உணவுப் பழக்கம், போதிய உடற்பயிற்சி, மருத்துவ பராமரிப்பின்மை ஆகியவை தான் இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்நிலையில் சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஹார்ட் ஸ்ட்ரோக்கால் அதிகம் தாக்கப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் டயடிக் அசோசியேஷனும் உடல் பருமன் குறித்து ஆய்வு செய்யும் மென்ட் தனியார் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து பால் சாசெர் தலைமையில் இதுகுறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு குழந்தைகளின் உடல்நிலை பாதிப்புக்கு பெற்றோர்தான் முழு முதற்காரணம் என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.

குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கில் அவர்களை தேவையற்ற உணவுப் பழக்கங்களுக்கு பெற்றோர் அடிமைப்படுத்தி விடுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டிய செயல் என
ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆய்வில் தெரியவந்த தகவல்கள் வருமாறு: 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் தாக்குகிறது ஹார்ட் ஸ்ட்ரோக். உடல் பருமன், ஜங்க் புட் உள்ளிட்டவை தான் இதற்கு முக்கிய காரணம். மேலும் தாய்ப்பால் இன்மை, பால் மற்றும் சரிவிகித உணவின்மை, உணவில் உப்பின் அளவு அதிகரிப்பது, மேற்கத்திய உணவுகளான பீட்சா, பர்கர் மீது அதிகரித்து வரும் மோகம், சிப்ஸ் போன்ற உணவுகளால் உடலில் கொழுப்பு சத்து அதிகரிப்பது போன்ற பல விஷயங்கள் இதற்கு காரணமாகின்றன.

குழந்தைகளுக்கு போதிய விளையாட்டு, உடற்பயிற்சி இல்லாவிட்டால் அதிக கலோரிகள் எரிக்கப்படாமல் உடலில் கொழுப்பாக தங்கி உடலை பருமனாக்கி விடுகிறது. இதனால் மிகச் சிறிய வயதிலேயே பல்வேறு நோய்த் தாக்குதல்களை சமாளிக்க வேண்டி உள்ளது.

இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்று கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 16 வயதுக்கு உட்பட்ட சுமார் 5,500 சிறார்களுக்கு உடல் பருமன் குறைப்பு சிகிச்சையை அளித்துள்ளது.

சராசரியாக மூன்றில் ஒரு குழந்தை என்ற அளவில் குழந்தைகளின் உடல் பருமன் பாதிப்பு உள்ளது. இவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இத்தகைய சிக்கல்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

நன்றி : newsonews

0 கருத்துகள்:

கருத்துரையிடுக