அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 11 ஏப்ரல், 2011

அந்த ஏழு நபர்கள் (பாகம்-2)

இறை இல்லங்களுடன் ஈடுபாடு கொண்ட மனிதர்:

அல்லாஹ்வின் இல்லமான மஸ்ஜித்துடன் ஒரு முஃமின் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். இத்தெடர்பு இறையச்சத்துடன் கூடிய இதயபூர்வமானதாக அமைய வேண்டும். ஒரு தொழுகையை நிறை வேற்றி விட்டு, அடுத்த தொழுகை நேரத்தை எதிர்பார்த்து, அல்லாஹ்வின் இல்லம் சென்று, அவனுடன் உரையாட ஆவலாக இருக்க வேண்டும்.
தொழுகை அல்லாஹ்வுடனான உரையாடலாக உள்ளது. பிரார்த்தனையாகத் திகழ்கிறது. பள்ளியில் சென்று, அல்லாஹ்வைக் காண்பது போன்று வணங்கவும், தனது இதயக்  கிடக்கைகளையும் உளக் குமுறல்களையும் அவனிடம் இறக்கிவைத்து, இறைஞ்சவும் ஒரு சாதனமாக அமைகிறது.  பள்ளியுடன் நெருக்கமான தொடர்பு ஒரு முஃமினின் வாழ்வில் அதி முக்கியமானதாகிவிடுகிறது. உண்மையான முஃமின் பள்ளியுடனான தொடர்பை துண்டித்து வாழ முடியாது. எந்த நிலையிலும் பள்ளியுடன் தொடர்பு துண்டிக்கப்படலாகாது. அவ்வாறு, துண்டிப்பவருக்கு இறையருள் எட்டாக் கனியாகிவிடும். எனவே, ஒவ்வொரு மனிதனும் இறையில்லங்களான மஸ்ஜித்களுடன் இதய பூர்வமான – ஆத்மார்த்தமான தொடர்புகளை வைத்துக் கொள்வது அவசியமாகும்.

அல்லாஹ்வுக்காக நட்புப்பாராட்டும் அவனுக்காகப் பிரியும் இரு மனிதர்கள்:

மனிதனுடைய இயற்கையான இயல்பு, ஒருவரோடு ஒருவர் நட்பு வாஞ்சைகொண்டு பழகுவதாகவே அமைந்துள்ளது. எந்த மனிதனும் தனித்து வாழ்வதை விரும்புவதில்லை. மனிதன் பல்வேறு தேவைகள் உடையவன். அவனால் தனது தேவைகளை தனித்து நின்று  நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ்வதன் மூலம் மனிதனுடைய தேவைகள் நிறைவேற்றப்படுகினறன.
நட்பு என்பது ஒரு புனிதமான, மகத்தான உறவு. வாழ்வில் நாம் நலிவடையும் காலங்களில் எமக்குக் கை கொடுக்கும் உறவு ஒன்று இருக்குமாயின், உண்மையில் நட்பு ஒன்றேதான்.மனிதன் எப்போதும் தனது உள்ளத்து உணர்வுகளைக் கொட்டித் தீர்த்திட ஒரு துணையையும் தனக்கு ஆபத்தில் துணை நிற்க ஒரு நண்பனையும் தேடிய வண்ணமே உள்ளான்.
மனிதனுக்கும், வனங்களில் வாழும் விலங்குகளுக்கும் இடையில் முக்கியமான வேறுபாடுடையதாக, பகுத்துக் காட்டும் பிரிகோடாக அன்பு அமைந்துள்ளது.இந்த வகையில் அன்பு, இரக்கம், நட்பு, பாசம், நேசம் என்பன இஸ்லாமிய வாழ்வின் அடிப்படைகளுள் மிக முக்கியமானவையாக அமைந்து காணப்படுகின்றன.
இஸ்லாம் இதற்கான ஆழமான வழிகாட்டலையும் வழங்கியுள்ளது. நல்ல நட்பின் நலன்கனையும் தீய நட்பின் பாதக விளைவுகளையும் நபி மொழி ஒன்று இவ்வாறு பிரிகோடிட்டுக் காண்பிக்கிறது.

‘நல்ல நண்பன் கஷ்தூரி வியாபாரியைப் போலாவான். தீய நண்பன் துருத்தி ஊதுபவன் போலாவான். கஷ்தூரி விற்பவன் உனக்கு இலவசமாக எடுத்துத் தரக்கூடும். அல்லது உனக்கு அதை விற்கவும் கூடும். அல்லது அதன் நறுமணத்தை நீ நுகரக்கூடும். துருத்தி ஊதுபவன் உனது ஆடையை எரித்துவிடக்கூடும். அல்லது அவனிடமிருந்து துர்வாடையை நீ நுகர நேரும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (புஹாரி –முஸ்லிம்)

மேலும், இன்னொரு நபிமொழி இவ்வாறு நட்புப் பற்றிப் பேசுகிறது.

‘எனது ஆத்மா எவன் கையில் உள்ளதோ,அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சுவர்க்கம் நுழையமாட்டீர்கள். பரஸ்பரம் அன்பு கொள்ளும் வரை, ஈமான் கொள்ளமாட்டீர்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

நட்புப் பாராட்டுவதை வலியுறுத்திய இஸ்லாம், தீய நட்பை துண்டிக்கவும் பணித்துள்ளது. இஸ்லாத்தை ஏற்று நடப்பவனே அல்லாஹ்வின் நிழலுக்குத் தகுதியானவன் என்பதை நாம் விளக்கப் புகுந்துள்ள ஹதீஸின் இப்பகுதி தெளிவுபடுத்துகிறது.

விபச்சாரத்திற்கான அழைப்பு விடுக்கும்போது, அல்லாஹ்வை அஞ்சி ஒதுங்கும் மனிதன்:

ஒரு பெண் தனது அழகு, கவர்ச்சி, செல்வச் செழிப்புப் போன்றவற்றைக் காண்பித்து, விபச்சாரத்திற்காக அழைக்கும் போது, அக்கொடிய பாவத்திலிருந்து தன்னை இறையச்சத்தின் மூலமாகக் காத்து, ஒதுங்கிவிடுகின்ற மனிதனும் அல்லாஹவின் நிழலுக்கு உரித்தானவனாக ஆகிவிடுகின்றான். விபச்சாரத்திற்கு அழைத்த பெண்ணின் பிடியிலிருந்து அல்லாஹ்வுக்கு அஞ்சி, தன் கற்பகை; காப்பாற்றிக் கொண்ட ஆதர்ஷ புருஷராக நபி யூசுப் (அலை) அவர்கள் திகழ்கிறார்கள் என்ற வரலாற்றுப் பேருண்மையை சூறா யூசுப் மிக விரிவாக விபரிக்கின்றது.

‘மேலும், அவர் எவளுடைய வீட்டிலிருந்தாரோ, அவள் அவர் மீது காதல் கொண்டு,தன் விருப்பத்திற்கிணங்குமாறு எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு, அவரை ‘வாரும்’ என்றழைத்தாள.; அ(தற்க)வர், அல்லாஹ் (இத்தீய செயலிருந்து) காத்தருள்வானக! நிச்சயமாக என் எஜமானாகிய (உன்;கண)வர் என் தங்குமிடத்தை அழகாக்கி வைத்திருக்கிறார். நிச்சயமாக (இத்தகைய நன்மை செய்வோருக்கு துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்று கூறினார்.

அவள், அவரை (அடைய ) திட்டமாக ஆசை கொண்டு விட்டாள். அவர் தன் இரட்சகனுடைய சான்றைக் கண்டிராவிடில், அவரும் அவள் மீது ஆசைகொண்டே இருப்பார். தீமையையும், மானக்கேடான செயல்களையும் அவரை விட்டும் நாம் திருப்பிவிடுவதற்காக (அவருக்கு) இவ்வாறு (எச்சரிக்கை செய்தோம்.) நிச்சமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் அடியார்களில் உள்ளவராவார். (12 :23 – 24)

இரகசியமாக தர்மம் செய்தல்:

தர்மம் செய்வதை வலியுறுத்தியுள்ள நபியவர்கள், ‘வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்யுறம் மனிதன்’ என வர்ணித்துள்ளார்கள். அத்தோடு, ‘தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக உள்ளது எனவும் ஒரு முறை கூறியுள்ளார்கள். செல்வ மிக்கவர்கள் புகழுக்காக – தர்மசீலன் என உலகில் பெயர் பெற நினைத்து தர்மம் செய்தால், அது மறுமையில் எந்தப் பயனையும் தராது. நகரத்திற்கே கொண்டு செல்லும் என்று எச்சரிக்கும் நபிமொழிகள் அதிகமாக உள்ளன.

‘நீ கொடைவள்ளல் என்று சொல்லப்படுவதற்காக தர்மம் செய்தாய், அவ்வாறு, (உலகில்) சொல்லப்பட்டுவிட்டது என்று (அல்லாஹ்) கூறுவான். பின்னர், இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு, இறுதியில் நரகில் தூக்கி எறியப்படுவார்’ என நபியவர்கள் கூறினார்கள்.        (முஸ்லிம்)

இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி. அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.
(அல்குர்ஆன் 2:2 3)

நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக் கேட்டார். நீர் ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே, (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவுளூ இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர) நூல்: புகாரி (1419)

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:272)

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும் அனாதைக்கும் சிறைப் பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும் நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்” (எனக் கூறுவார்கள்.) எனவே அந்த நாளின் தீங்கி ருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றி னான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வழங்கினான். அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும் பட்டையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான். (அல்குர்ஆன் 76:8-12)

புகழ் விரும்பாது, பகிரங்கப்படுத்தாது, இரகசியமாக தர்மம் செய்வது அல்லாஹ்வின் நிழலைப் பெற்றுத்தர வழிகோலும் செயலாகும்.

‘ஒரு மனிதர் இரவில் யாருக்கும் தெரியாமல் (வேறு) மனிதர் ஒருவருக்கு ‘ஸதகா’ வழங்கினார். அது ஒரு திருடனின் கையில் கிடைத்திருந்தது. மனிதர்கள், இதனை மறுநாள் பேசிக் கொண்டார்கள். இதனை அறிந்த அம்மனிதர், மீண்டும்  ஒரு முறை ஒரு பெண்ணுக்கு ‘ஸதகா’ வழங்கினார். அப்பெண் ஒரு விபச்சாரியாக இருந்தாள். விபச்சாரிக்கு ‘ஸதகா’ வழங்கப்பட்டதாக  மக்கள் பேசிக் கொள்ளலானார்கள். இதனையும் அறிந்த அம்மனிதர், அன்றிரவு ஒரு கனவு காண்கிறார். அக்கனவில் ஒருவர் வந்து, நீ திருடனுக்கு (இரவில் இரகசியமாக) வழங்கிய ‘ஸதகா’வானது அவன் தன் திருட்டுத் தொழிலிருந்து ஒதுங்கி திருந்தக் காரணமாகிவிட்டது. விபச்சாரத்திலிருந்து திருந்தி வாழ்வதற்கு வழியமைத்துவிட்டது’ என்று கூறிச் சென்றார்.(ஹதீஸின் சுருக்கம். புஹாரி -முஸ்லிம்)

அதிகம் செல்வம் வழங்கப்பட்டவர் தன் செல்வத்தின் மூலம் தான தர்மங்களை வாரி வாரி வழங்கி வருவதைப் பார்க்கும் ஒருவர் தனக்கு இவ்வாறு செல்வம் வழங்கப்பட்டால் நாமும் இவ்வாறு தர்மம் செய்யலாமே என்று ஆசைப்படலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.
1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்கலும் ஓதி வழிபடுகிறார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அத்துள்ளான். அவர் அதனை இரவு பகல் எல்லா நேரங்கலும் தானம் செய்கிறார். (இவ்விருவரைப் பார்த்து நாமும் அப்படியாக வேண்டும் எனப் பொறாமை கொள்ளலாம்.) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ர) நூல்: புகாரி (5025)

நாம் மற்றவர்களுக்காகச் செலவிடும் போது! இறைவன் நமக்குச் செலவிடுவான். ஏழைகளுக்குச் செலவிடும் பணத்தை இறைவனுக்கு வழங்குவதைப் போல் கருத வேண்டும்.

ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடுளூ உனக்கு நான் செலவிடுவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: புகாரி (5352)

தனிமையில் இறை தியானத்தின் போது, அழும் மனிதன்:

இரவு நேரதில் தஹஜ்ஜுத் வேளையில் அல்லது தனித்திடும் போது  அல்லாஹ்வை நினைத்து, தான் செய்த பாவத்திற்காக அழுது, கண்ணீர் வடித்து, மன்றாடிப் பாவமன்னிப்புக்கோரும் அடியானை அல்லாஹ் தனது நிழலில் இளைப்பாற வைத்துக் கண்ணியப்படுத்துவான் என நாம் விளக்கிவரும் ஹதீஸின் இறுதிப் பகுதி சிலாகிக்கின்றது.
உண்மையில், இந்நிலையை உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் போது, இரவில் எழுந்து நின்று, தொழுது, அல்லாஹ்விடம் தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டு, அழுகின்ற போது அனுபவிக்கலாம். இப்படியான நேரத்தில் மன்றாடுவது எவ்வளவு பெரிய அருளையும் அந்தஸ்தையும் மனிதர்களுக்கு அல்லாஹ்விடத்தில் அதிகப்படுத்துகின்றது. இத்தகைய பாக்கியம் பெற்றவர்களாகவும், அவனது நிழல் பெறும் ஏழு கூட்டத்தில் எம்மையும்  இணைத்துக் கொள்ள நாம் அனைவரும் முயற்சிப்போமாக!

நன்றி : ஹஃபீழ் சலஃபி

நன்றி : கடயநல்லூர் அக்ஸா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக