அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 26 நவம்பர், 2012

சத்தியத்தின் முகம்

“தங்களுக்கு அல்லாஹ் வானுலகிலிருந்து ஒருவாள் வழங்கியதாகவும், அதனை அவர்கள் தங்களிடம் கொடுத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். இது உண்மையா?” “உண்மை இல்லை” – காலித் இப்னுவலீத் (ரலி) பதில் பகர்ந்தார்கள்.

“அப்படியானால் தங்களை ‘அல்லாஹ்வின் வாள்’ என்று அழைப்பதற்கு என்ன காரணம்?”

-மேற்கண்டகேள்விகளைக் கேட்டது கிறிஸ்தவப் படையைச் சேர்ந்த ஜூர்ஜா என்பவர்.

இடம்: யர்முக் யுத்தம்.

அணி வகுத்திருந்த கிருஸ்தவப் படையிலிருந்து வெளியே வந்த ஜூர்ஜா, முஸ்லிம் படைத் தலைவர் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைச் சந்திக்கவேண்டும் என்று கோரினார். ஜூர்ஜாவை காலித் அவர்கள் சந்தித்தார். ஜூர்ஜா பேச ஆரம்பித்தார்.

“காலித்! தாங்கள் உண்மையை மட்டுமே சொல்லவேண்டும். காரணம், தாங்கள் சுதந்திர மனிதர். சுதந்திர மனிதர்கள் பொய் சொல்வதில்லை. தாங்கள் ஏமாற்றவும் கூடாது. காரணம் கண்ணியமிக்கவர்கள் ஏமாற்றமாட்டார்கள்.”

தாங்கள் என்ன வேண்டுமானலும் கேட்கலாம் என்றபொருளில் காலித் (ரலி) ஜூர்ஜாவைப் பார்த்தார். காலித் (ரலி) அவர்களை ‘அல்லாஹ்வின் வாள்’ என்று அழைப்பதற்கு என்ன காரணம் என்பதுதான் ஜூர்ஜாவின் முதல் கேள்வியாக இருந்தது.

காலித் (ரலி) அவர்கள் இவ்வாறு பதில் பகர்ந்தார்கள்:

“நாங்கள் இருளில் கிடந்தோம். இறைவன் எங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியை வழங்கினான். ஆனால் நாங்கள் அவரைப் புறக்கணித்தோம். பின்னர் நிறைய பேர் அவரது வார்த்தைகளைச் செவி மடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களையும் அவர்களை ஏற்றுக் கொண்டவர்களையும் நாங்கள் தொல்லைகளுக்கு ஆட்படுத்தினோம். எங்களுக்கிடையில் சண்டைகளும் நடந்தன. கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் மீது இறைத்தூதர் அவர்களின் பிடி இறுகியது. எங்களுடைய இதயங்களும் தலைகளும் அல்லாஹ்வுக்கு அடி பணிந்தன. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வழியாக அல்லாஹ் எங்களை நேர்வழியில் ஆக்கினான். அவர்களோடு சேர்ந்து நாங்களும் தீமைகளுக்கெதிராகப் போராடினோம்.

ஒரு தடவை அண்ணலார் அவர்கள், ‘அல்லாஹ் வெளியில் எடுத்த நிறைய வாள்களில் ஒரு வாள் நீ’ என்று கூறினார்கள். அதற்கு பிறகுதான் நான் ‘அல்லாஹ்வின் வாள்’ என்று அழைக்கப்பட்டேன்.”

ஜூர்ஜா கேட்டார்: “என்ன விஷயத்திற்காக எங்களை நீங்கள் அழைக்கிறீர்கள்?”

காலித்: “வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற சத்தியத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். முஹம்மது(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் வாழ்ந்திடவும் வேண்டும்.”

ஜூர்ஜா:”இன்று உங்களோடு சேர்பவர்களுக்கு என்ன அந்தஸ்து வழங்குவீர்கள்?”

காலித்: “இஸ்லாமில் எங்களுக்கு என்ன அந்தஸ்து உள்ளதோ அதே அந்தஸ்து அவர்களுக்கும் கிடைக்கும். அல்லாஹ் எங்களுக்குக் கடமையாக்கிய காரியங்கள் அவர்களுக்கும் கடமையாகும். எங்களுக்கிடையில் பிரமுகர்கள், சாதாரண மனிதர்கள், முதலில் வந்தவர், கடைசியில் வந்தவர் என்ற வித்தியாசம் இல்லை.”

ஜூர்ஜா: “இப்பொழுது வருபவர்களுக்கு அதே பிரதிபலனும் அனுகூலங்களும் கிடைக்குமா?”

காலித்: “ஆம். கிடைக்கும். ஒரு வேளை எங்களை விட அதிகமாகவே அவர்களுக்குக் கிடைக்கும்.”

ஜூர்ஜா: “காரணம்…?”

காலித்: “நாங்கள் நிறைய தியாகங்கள் செய்திருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் இறைத்தூதர் அவர்கள் வாழ்ந்திருந்த சமயத்தில் நாங்கள் இஸ்லாமினுள் நுழைந்தோம். அவர்களுக்கு இறைச்செய்தி (வஹீ) வருவதை நாங்கள் நேரில் கண்டோம். இறை அத்தாட்சிகள் பலவற்றை அவர்கள் எங்களுக்குக் காண்பித்துத் தந்தார்கள். ஆனால் நீங்கள் அப்படியல்ல. அனைத்தையும் கேட்கும் வாய்ப்பு மட்டுமே உங்களுக்கு உள்ளது. அதனால் மனதறிந்து இஸ்லாமினுள் நுழைபவர்கள் உண்மையில் எங்களை விடச் சிறந்தவர்கள்.”

ஜூர்ஜா: “தாங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.”

ஜூர்ஜா இதனைச் சொல்லிவிட்டு முஸ்லிம் அணியில் வந்து நின்றார். கலிமாவை உரக்க மொழிந்தார். ஸுப்ஹானல்லாஹ்!

பின்னர் முஸ்லிம்களோடு சேர்ந்து கொண்டு எதிரிகளை எதிர்த்துப் போராடினார். ஒரு தடவை மட்டும்தான் அவர் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களோடு தொழுதார். அல்லாஹு அக்பர்! அன்று மாலையே அவர் ஷஹீதானார்.

நன்றி : mpmpages

0 கருத்துகள்:

கருத்துரையிடுக