அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

ஞாயிறு, 10 ஜூலை, 2011

நெஞ்சு எரிச்சல் ஏன் ?

வயிற்றில் செரிமானத்திற்கு பயன்படும் அமிலங்கள், வயிற்றையும் வாயையும் இணைக்கும் ஈஸோபாகஸ் எனும் பகுதியில் புகும் போது ஒரு புளிப்பு தன்மையோடு, எரிச்சல் ஏற்படுகிறது. புண்களும் ஏற்படலாம். பொதுவாக, இந்த பகுதிக்கும் வயிற்றிற்கும் இடையில் இருக்கும் ஸ்பிங்க்டர் என்ற குழாய் சரியாக வேலை செய்யாவிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. குடலிறக்கம் போன்ற சில காரணங்களாலும் நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம்.

கொழுப்பு, மதுபானங்கள், புகை பிடித்தல் இனிப்புகள், சாக்லெட் மற்றும் மிண்டுகள், இந்த பகுதியில் திசுவை வலுவிழக்க செய்து, வயிற்றிற்கும் ஈஸோபாகஸிற்கும் உள்ள திறப்பை குறைக்கிறது. இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அதிகமாக சாப்பிடுதல், வேக வேகமாக சாப்பிடுதல், ஒழுங்காக மெல்லாமல் விழுங்குதல், சரியாக சமைக்காத உணவுகளை உண்ணுதல் போன்றவற்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். பொதுவாக, நாம் சாப்பிடும் உணவுகளால் ஏற்படுவதை சாப்பாட்டிற்கு பின் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் அதிகமாக சுரப்பதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

இதனை தடுக்க நாம் சில வழிகளை கையாளலாம். முதலில், அதிகமாக இந்த பிரச்னைகளை உடையவர்கள் மூன்று வேளைகள் அதிகமாக உண்பதை விட, சிறு சிறு அளவில் அவ்வப்போது உணவை உட்கொள்ளலாம். காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் அதிகமாக உள்ள அரிசி மற்றும் பிரட் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளலாம். ஆனால் அதிகமாக உண்ண கூடாது. காபி, டீ, பியர், வைன் போன்றவை அமிலம் சுரப்பதை தூண்டுவதால் இவற்றை அதிகம் குடிக்க கூடாது. தூங்கும்முன் பால் குடிப்பது அமிலச் சுரப்பை அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது.

வாசனை பொருட்கள் அதிகமுள்ள உணவு, வறுத்த உணவுகளை தவிர்க்கலாம். அழுத்தத்தை தவிர்த்து, வாழ்க்கை முறையை மாற்றுதல் நெஞ்சு எரிச்சலை குறைக்க உதவும். சாப்பிட்ட உடனே படுக்கைக்கு செல்ல கூடாது. அதிக எடையும் நெஞ்சு எரிச்சலை தூண்டுவதால், எடையை குறைக்கலாம்.

உணவிற்கிடையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல பலன் தரும். வாழைப்பழத்தில் சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோசுடன் நார் சத்தும் உள்ளதால் நன்மையை தருகிறது. அதிகமாக சாப்பிட்ட பிறகு உங்கள் வாயில் புளிப்பு தன்மை ஏற்பட்டால் அதிக அமிலம் சுரந்திருப்பதை அறியலாம். இதனால் ஆபத்தான வயிற்று புண்களும், ஈஸோபாகஸில் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதிக கவனம் தேவை.

நன்றி: தினமலர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக