அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 8 ஏப்ரல், 2013

உண்மை பேசுவது நன்மைக்கு வழி வகுக்கும்.


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَكُونُواْ مَعَ الصَّادِقِينَ {119}
9:119. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்! 
அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்...
 
இஸ்லாத்தை வெறுத்த மக்களுடைய உள்ளங்களிலும்கூட உண்மையாளர் என்ற நன்னம்பிக்கையை விதைத்தவர்கள் ஏகஇறைவனின் இறுதித்தூதர்(ஸல்) அவர்கள்.இஸ்லாத்தை வெறுத்ததுடன் அதை வேறெருக்க தருனம் பார்த்து காத்துக் கொண்டிருந்தவர் அபூ சுஃப்யான் அவர்கள். சத்தியத் தூதர்(ஸல்) அவர்களைப் பற்றிய உண்மையான விபரங்களை ஹிர்கல் மன்னன் அரசவையில் கூறுவதற்கான வாய்ப்பு அபூ சுஃப்யான் அவர்களுக்கே கிடைத்தது. அபூஜஹ்லும், அபூஜஹ்லைப் போன்ற பெருந்தலைவர்களும் அதிகமானோர் பத்ரில் கொல்லப்பட்டப் பின்னரும் சிறிதும் தயங்காமல் தலைமைப் பொறுப்பை ஏற்று துரிதமாக செயல்பட்டவர். முஸ்லீம்களுக்கெதிரான பல போர்களை தலைமை தாங்கி வழிநடத்தியவர்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய முகத்தில் பயங்கர காயத்தை ஏற்படுத்தி கடைவாய் பல் உடைந்து இரத்தத்தை ஓட்டச்செய்த உஹது யுத்தத்தில் எண்ணிலடங்கா முஸ்லீம்களின் சடலங்களின் மீது நடந்து சென்று லாத் வாழ்க ! உஸ்ஸா வாழ்க ! மனாத் வாழ்க ! என்று கைகளை உயர்த்தி விண்ணதிர முழங்கிய பயங்கர இஸ்லாமிய எதிர்ப்பாளர்.அப்படிப்பட்ட பயங்கர இஸ்லாமிய எதிர்ப்பாளர் ஒருநாள் இஸ்லாத்தை தழுவியதாக பிரகடனம் செய்தார்.

முஸ்லீம்களுடன் நடந்த எந்த யுத்தத்திலும் வாள் முனையில் அவர் இஸ்லாத்தை ஏற்க வில்லை ! அல்லது தோல்வியைத் தழுவி இஸ்லாத்தை ஏற்க வில்லை ! மாறாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் உண்மைப் பேசும் நற்குணம் அவருடைய  வாழ்க்கையை ஒருநாள் தலைகீழாகப் புரட்டி எடுத்து ரலியல்லாஹீ அன்ஹீ என்ற அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குரியவரானார்.

அன்றொரு நாள் !!

ரோம பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய ஃபலஸ்தீனத்து சந்தை ஒன்றில் வியாபாரம் நிமித்தம்  அபூசுஃப்யான் அவர்கள் அமர்ந்திருந்தப் பொழுது அரசவைக் காவலர்களில் சிலரால் ரோமாபுரி மன்னர் ஹிர்கல் அவர்களின் அவைக்கு அழைத்து செல்லப்பட்டார். 
  அங்கு மொழி பெயர்ப்பாளர் ஒருவரை நியமித்துக்கொண்டு குறைஷிகளே உங்கள் பகுதியில் இறைத்தூதர் என்று சொல்லிக்கொள்ளும் அந்த மனிதரின் நெருங்கிய உறவினர் யாரேனும் உண்டா ? என்று கேட்கிறார். அதற்கு அபூஸுஃப்யான் நானே அவருக்கு நெருங்கிய உறவினர் என்கிறார்.அபூஸுஃப்யான் அவர்களையும் அவருடன்வந்திருப்பவர்களையும் தனக்கு முன்னால் நிறுத்துமாறு கட்டளையிட்ட மன்னர் தனது மொழிப்பெயர்ப்பாளரை நோக்கி 'நான் அந்த மனிதரைப்பற்றி (முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவரிடம் (அபூஸுஃப்யான்) கேட்பேன். இவர் என்னிடம் பொய்யாக ஏதேனும் சொன்னால் மற்றவர்கள் உண்மை கூறிடவேண்டும். இதை அவரிடம் சொல்' என்றார். 

மன்னரின் கேள்வி: உங்களில் அவர்களுடைய பாரம்பரியம் எத்தகையது?
அபூஸுஃப்யான் அவர்களின் பதில்: அவர் எங்களில் சிறந்த பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்.
கேள்வி: இவருக்கு முன்னால் உங்களில் யாரேனும் எப்போதாவது (நான் இறைத்தூதர் என்ற) இந்த வாதத்தை செய்ததுண்டா?
பதில்: இல்லை
கேள்வி: இவரைப்பின்பற்றி செல்பவர்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர்களாக இருக்கிறார்களா? அல்லது சாமானியர்களாக இருக்கிறார்களா?
பதில்: சாமானியர்கள்தான் அவரை பின்பற்றிச் செல்கின்றார்கள்.
கேள்வி: அவரை பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா?
பதில்: அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர்.
கேள்வி: அவர் காட்டுகின்ற மார்க்கத்தில் நுழைந்த பின்னர் அதன் மீது அதிருப்தி கொண்டு யாரேனும் அந்த மார்க்கத்திலிருந்து விலகியதுண்டா?
பதில்: இல்லை
கேள்வி: அவர் இப்போது வாதிக்கின்ற (நபித்துவ) வாதத்தை சொல்வதற்கு முன்பு அவர் பொய் சொல்வதாக எப்போதாவது அவரை சந்தேகித்ததுண்டா?
பதில்: இல்லை
கேள்வி: அவர் (எப்போதாவது) வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்திருக்கிறாரா?
பதில்: இதுவரை இல்லை. நாங்கள் இப்போது அவருடன் (ஹுதைபியா என்னும் இடத்தில்) ஒரு உடன்படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பது எங்களுக்கு தெரியாது. ( இந்த பதிலைக் குறிப்பிடுகின்ற அபூஸுஃப்யான் அவர்கள் அப்போதைக்கு முஹம்மது நபி மீது குறை கற்பிக்க அந்த வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையும் எனக்கு கிடைக்கவில்லை என்று கூறினார் ).
கேள்வி: அவருடன் நீங்கள் போர் புரிந்திருக்கின்றீர்களா?
பதில்: ஆம்
கேள்வி: அவருடன் நீங்கள் புரிந்த போர்களின் முடிவுகள் எவ்வாறிருந்தன?
பதில்: எங்களுக்கும் அவருக்குமிடையே வெற்றி தோல்வி மாறி மாறி வந்திருக்கின்றன.
கேள்வி: அவர் உங்களுக்கு என்ன போதிக்கின்றார்?
பதில்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள், உங்கள் முன்னோர்கள் கூறிவந்த தவறான கொள்கைகளை விட்டுவிடுங்கள் என்று போதிக்கிறார். தொழுகையைக் கடைப்பிடித்தல், உண்மைப்பேசுதல், கற்பைப் பேணுதல், உறவு முறைகளைப் பேணுதல் போன்ற அறப்பண்புகளை எங்களுக்கு ஏவுகிறார்.

பதில்களை பெற்றுக்கொண்ட ஹிர்கல் மன்னர் பின்வருமாறு கூறினார்:
நான் உம்மிடம் அவரைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு நீர் அளித்த பதில்களை கவனிக்கினற போது ஒரு உண்மை புரிகின்றது.எந்த இறைத்தூதருமே இவரைப்போன்றே அவரவரின் சமூகத்திலுள்ள உயர்ந்த பாரம்பரியத்திலிருந்து தான் அனுப்பப்பட்டுள்ளனர். இவருக்கு முன்னர் (இவருடைய பாரம்பரியத்தில்) யாரேனும் இந்த வாதத்தை செய்திருந்தால் 'முன்னர் செய்யப்பட்டு வந்த வாதத்தைப் பின்பற்றித்தான் இவரும் செய்கிறார்' என்று எண்ணியிருப்பேன். இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் தமது முன்னோரின் மன்னராட்சியை இவர் அடைய விரும்புகின்றார் என்று எண்ணியிருப்பேன். இந்த (தூதுத்துவ) வாதத்தை இவர் செய்வதற்கு முன்பு பொய் சொல்லக்கூடியவர் என்று அவரை நீங்கள் சந்தேகித்ததும்கூட இல்லை என்கின்றபோது 'மக்களிடம் பொய் சொல்லத் துணியாதவர் இறைவன் மீது பொய்யுரைக்க துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன். ஆரம்பத்தில் சாமானியர்கள்தான் அவரை பின்பற்றுகின்றனர் என்பது முற்றிலும் உண்மையே. அப்படிப்பட்டவர்கள்தான் இறைத்தூதர்களை பின்பற்றுபவர்களாக இருந்துள்ளார்கள்.

அவரை பின்பற்றுபவர்கள் அதிகரித்துச்செல்ல காரணம் என்னவென்றால், இறைநம்பிக்கையைப் பொறுத்தவரை அது நிறைவுறும்வரை அப்படித்தான் வளர்ந்துக்கொண்டே இருக்கும்.அவரது மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரும் அதிருப்தி கொண்டு அதிலிருந்து விலகவில்லை என்பதற்கு காரணம், விசுவாசத்தின் தெளிவு இதயங்களுக்குள் புகுந்து விட்டால் அது மீண்டும் வெளியேறாது. . இறைத்தூதர்களில் யாரும் மோசடி செய்ய மாட்டார்கள் என்பதற்கேற்ப இவரும் அவ்வாறு திகழ்கிறார். எனவே நீர் அவரைப் பற்றி குறிப்பிட்ட புதில்கள் யாவும் உண்மையானால் (ஒரு காலத்தில்) எனது இரு பாதங்களுக்குக் கீழ் உள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார்.

நாங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டப்பின் என்னுடன் வந்தவர்களிடம், நான் பொய்யான தகவல்களை கூறியதாக என் வியாபாரக் குழுவினர்கள் கூறிவிடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் அப்போது எனக்கு இல்லாதிருந்தால் இறைவன் மீது ஆணையாக! முஹம்மது நபியைப் பற்றி பொய்யான தகவல்களையே கூறியிருப்பேன் என்றுக்கூறி விட்டு 'ரோமர்களின் மன்னனிடத்திலும் முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காரியம் மோலோங்கி விட்டது'' என்று கூறினேன். 

அப்போதிருந்தே அவர்கள் தாம் ( முஹம்மது ஸல் அவர்களின் மார்க்கம் ) வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கையில் திளைத்தவனாகவே நான் இருந்து வந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்குள்ளேயும் இஸ்லாத்தை நுழைத்து விட்டான். ஆதாரம்: புகாரி, முஸ்லீம்

ஏற்கனவே இறுதி நபியின் வருகையைப் படித்திருந்த ஹிர்கல் மன்னனுடைய கேள்விகளுக்கு அபூசுஃப்யான் அவர்கள் பொய் கலக்காமல் கூறிய உண்மையான பதில்கள் ஹிர்கல் மன்னனுக்கு மனநிறைவை ஏற்படுத்தி இறுதி நபியின் வருகையின் மீதான அவரது நம்பிக்கையை மேலும் உறுதிப் படுத்தியது.  நபிகளார் உண்மை பேசக் கூடியவர் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும் முன்னோர்கள் சார்ந்த மதத்தின் மீது கொண்டிருந்த கண்மூடித் தனமான மதவெறியின் காரணத்தினால் அபூசுஃப்யான் அவர்களின் மூடி இருந்த அறிவுக் கண்களை பொய் கலவாத இந்த சத்திய உரையாடல் மூலமாக அல்லாஹ் அவரது உள்ளத்தை புரட்டி எடுத்து விடுகின்றான் அவரது உள்ளத்தில் இஸ்லாத்தை நுழைத்து அவரது அறிவுக் கண்களை திறக்கச் செய்தான்.

க்கா வெற்றிக்குப்பிறகு தான் அபூசுஃப்யான் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார் என்பது எல்லோராலும் அறியப்பட்ட வரலாறு என்றாலும் அவரது உள்ளத்தில் இறைவன் இஸ்லாத்தை நுழைத்தது மேற்படி சம்பவத்தில் தான் என்பதை அவரேக்கூறுகிறார். 
 
நன்றி:அதிரை ஏ.எம்.பாரூக்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக