அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 23 மே, 2011

முதியவர்களிடம் நடந்துகொள்ளும் முறைகள் (பகுதி - 2)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த மனிதர். மக்காவை வெற்றி கொண்ட அந்நேரத்தில் மக்காவிற்கும் மதீனாவிற்கும் மன்னர் அவர்கள் தான். இந்த நிலையிலும் முதியவரைப் பார்க்க நான் வந்திருப்பேனே என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் முதியவர் நலம் பேண வேண்டும் என்று கூறுகிறது.

இந்த உலகத்தில் ஒருவர் இன்னொருவரைச் சார்ந்து வாழும் இயல்பிலேயே மனிதனை இறைவன் படைத்துள்ளான். அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை பல கட்டங்களில் அவன் பிறரைச்சார்ந்துள்ளான். இவனுக்கும் இவன் யாரைச்சார்ந்து இருக்கின்றானோ அவனுக்கும் இந்த சார்புவாழ்வினால் இவ்வுலகில் பலன் ஏற்படுவதால் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். முஸ்­லிம்கள் மறுமைநாளை நம்பியவர்கள். எனவே நம்மைச் சார்ந்து வாழும் முதியவர்களுக்கு உதவிபுரிவதால் இவ்வுலகத்தில் நமக்கு பலன் கிடைக்காவிட்டாலும் மறுஉலகத்தில் பலன் கிடைக்கும் என்று நம்பினால் நிச்சயம் அல்லாஹ்விடத்தில் இதற்கான கூலி  கிடைக்கும்.

யார் ஒரு முஸ்­மின் கவலையை அகற்றுகிறாரோ மறுமைநாளில் அவருடைய கவலையை அல்லாஹ் அகற்றுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர­) அவர்கள்

நூல் : புகாரி (2442)

யார் நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாமலும் சிறியவருக்கு இரக்கம் காட்டாமலும் (மார்க்க) அறிஞரின் தகுதியை அறிந்து (அதற்குத்தக்கவாறு அவரிடம் நடந்து) கொள்ளாமல் இருக்கிறார்களோ அவர்கள் எனது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி‎விப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ர­) அவர்கள்

நூல் : அஹ்மத் (21693)

மார்க்கத்திற்கு முரணாக முதியவர்கள் கூறும் போது அதற்கு நாம் கட்டுப்படவேண்டியதில்லை. ஆனால் அவர்களுக்கும் நமக்கும் மத்தியில் கொள்கையில் வேறுபாடு இருப்பதினால் அவர்களிடத்தில் நாம் காட்ட வேண்டிய பணிவை சற்றும் குறைத்துவிடக் கூடாது. கொள்கை வேறுபாட்டினால் சிலர் அறியாமல் முதியவர்களை கேலி ­செய்து கொண்டும் அவர்களிடத்தில் கடினமாக நடந்துகொண்டும் இருக்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய செயல். நம்மை விரும்பாதவர்களாக அவர்கள் இருந்தாலும் அவர்கள் நோய்வாய்ப்படும் போது அவர்களை நலம் விசாரிக்கச் செல்ல வேண்டும்.

ஒரு முஸ்­ம் இன்னொரு முஸ்­மிற்கு செய்யும் கடமைகளை முழுமையாக அவர்கள் விஷயத்திலும் நிறைவேற்ற வேண்டும். கொள்கை வேறுபாட்டால் முதியவருக்கு இளையவர் சலாம் சொல்லவதை விட்டுவிடக்கூடாது. பெரியவருக்கு சிறியவர் சலாம் சொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் ஒரு வழிமுறையை கற்றுத் தந்துள்ளார்கள். பெரியவருக்கு மரியாதை செய்து பணிவாக நடக்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இந்த ஒழுங்குமுறையை கற்றுத்தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

சிறியவர் பெரியவருக்கும் நடந்துசெல்பவர் உட்கார்ந்திருப்பவருக்கும் குறைவானவர்கள் அதிகமானவர்களுக்கும் சலாம் சொல்லட்டும்.

அறிவிப்பவர் : அபூஹீரைரா (ர­லி) அவர்கள்

நூல் : புகாரி (6231)

சில குடும்பங்களில் பெரியவர்கள் பெரும்பாலான விஷயங்களில் ஒதுக்கப்படுகின்றார்கள். வயதாகிவிட்ட காரணத்தினால் அவர்களை யாரும் பொருட்படுத்தாமல் முன்னுரிமை அளிப்பதில்லை. அவர்களிடத்தில் ஆலோசனை செய்யாமல் பல காரியங்கள் நடத்தப்படுகின்றது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் பல விஷயங்களில் வயதை கவனித்து பெரியவர்களை முற்படுத்தியுள்ளார்கள். வயதில் மூத்தவர்களாக இருப்பதால் இவ்வாறு செய்வது அவர்களுக்கு கண்ணியம் சேர்ப்பதாகவும் அவர்கள் அனுபவம் மிகுந்தவர்களாக இருப்பதால் நல்ல ஆலோசனையை தருவார்கள் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

குர்ஆன் மற்றும் ஹதீஸிற்கு அடுத்து வயதில் மூத்தவர் தொழவைக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஒரு கூட்டத்திற்கு அவர்களில் அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத்தெரிந்தவர் இமாமத் செய்யட்டும். அவர்கள் ஓதுவதில் சமமாக இருந்தால் அவர்களில் சுன்னாவை நன்கு அறிந்தவர் இமாமத் செய்யட்டும். அவர்கள் சுன்னாவில் சமமாக இருந்தால் அவர்களில் முத­ல் ஹிஜ்ரத் செய்தவர் இமாமத் செய்யட்டும். ஹிஜ்ரத்திலும் அவர்கள் சமமானவர்களாக இருந்தால் அவர்களில் மூ‎த்தவர் இமாமத் செய்யட்டும்.

அறிவிப்பவர் : அபூ மஸ்ஊத் (ர­லி­) அவர்கள்

நூல் : முஸ்­லிம் (1079)

கருத்து தெரிவிக்கும் போது முத­ல் பெரியவர் பேச வேண்டும்

ஒரு கூட்டம் முக்கியமான நபரைப் பார்த்துப் பேசுவதற்காகச் சென்றால் அக்கூட்டத்தில் பெரியவர் முத­ல் பேச வேண்டும். பெரியவர்களை பின் தள்ளிவிட்டு இளையவர்கள் முந்திக் கொள்ளக் கூடாது.

அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவ்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசத் துவங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் பெரியவர்களைப் பேசவிடு. பெரியவர்களைப் பேசவிடு என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் (வாய் மூடி) மௌனமாகிவிட்டார்கள். பின்பு முஹய்யிஸா  அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசினார்கள்.

அறிவிப்பவர் : சஹ்ல் பின் அபீ ஹஸ்மா (ரலீ) அவர்கள்

நூல் : புகாரி (3173)

வயதில் மூத்தவருக்கு முதலி­டம்

சாப்பாடு, பானம் போன்று ஏதேனும் பொருட்களை கொடுக்கும் போது முதலில் வயதில் மூத்தவருக்கு வழங்க வேண்டும். பின்பு அவரை விட வயது குறைந்தவருக்கு வழங்கவேண்டும். பெரியவர்களுக்கு கண்ணியம் கொடுப்பதற்காக இவ்வழிமுறையை இஸ்லாம் பேணச் சொல்கிறது. நமக்கு தேனீர் வழங்கப்படும் போது முத­ல் நம்மை விட மூத்தவருக்கு மரியாதைக்காக கொடுத்துவிட்டு பின்பு நாம் குடிக்கின்றோம். நம்மைவிட மூத்தவர்கள் வந்திருக்கும் போது அவர்களை காக்கவைத்து இளையவர்கள் உண்டால் அது மரியாதைக் குறைவாக கருதப்படும். ஆனால் மூத்தவர்கள் உண்ண இளையவர்கள் காத்திருந்தால் இதை மரியாதைக் குறைவு என்று யாரும் கூறமாட்டார்கள்.

மூத்தவரோடு இளையவர் சரிக்கு சமமாக ஏதேனும் ஒரு விஷயத்தில் போட்டிபோட்டால் என்னதான் இருந்தாலும் அவர் வயதில் மூத்தவரில்லையா? என்று நாம் கேட்கிறோம். பெரியவர் மீது தவறே இருந்தாலும் சிறியவன் நீ பணிந்து தான் போக வேண்டும் என்று உபதேசம் செய்கிறோம். பெரியவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறோம். இந்த ஒழுங்கு முறையைத் தான் நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் உணர்த்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நான் பல்துலக்கும் குச்சியால் பல்துலக்கிக் கொண்டிருந்தவாறு கனவு கண்டேன். அப்போது இரண்டு மனிதர்கள் (பல்துலக்கும் குச்சி வேண்டி) என்னிடத்தில் வந்தார்கள். அவர்களில் ஒருவர் மற்றொருவரை விட பெரியவர். அவர்களில் சிறியவருக்கு அக்குச்சியை நான் கொடுத்தேன். அப்போது பெரியவருக்கு முத­ல் கொடுங்கள் என்று என்னிடம் கூறப்பட்டது. எனவே அதை நான் பெரியவரிடத்தில் கொடுத்தேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர­லி)

நூல் : முஸ்லி­ம் (5324)

நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் பானம் கொண்டுவரப்பட்டால் அதை அருந்திவிட்டு மீதத்தை வலது புறத்தில் இருப்பவருக்குத் தருவார்கள். ஆனால் ஒரு முறை பெருமானாரிடத்தில் குவளையில் பானம் கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்களின் வலது புறம் சிறுவனும் இடது புறம் பெரியவர்களும் அமர்ந்திருந்தார்கள். பெரியவர்களுக்கு முத­ல் தர வேண்டும் என்று எண்ணி அந்த சிறுவனிடத்தில் இதை நான் இந்த பெரியவர்களுக்குத் தரட்டுமா? என்று அனுமதி வேண்டினார்கள். ஆனால் அந்த சிறுவன் அல்லாஹ்வின் தூதரே தங்களிடமிருந்து எனக்கு கிடைக்கக்கூடிய மீதத்தை நான் எவருக்கும் விட்டுகொடுக்கமாட்டேன் என்று கூறினார். எனவே நபி (ஸல்) அவர்கள் அதை அச்சிறுவனுடைய கையில் வைத்துவிட்டார்கள்.

அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ர­லி­) அவர்கள்

நூல் : புகாரி (2351)

வழமையாக நபி (ஸல்) அவர்கள் வலது புறத்தில் உள்ளவருக்குத் தான் தருவார்கள். ஆனால் இடது புறத்தில் பெரியவர்கள் இருந்ததால் அவர்களுக்குத் தர வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் அந்த சிறுவர் பெருமானாரின் மீது வைத்திருந்த அன்பினால் அவர்கள் வைத்த மீத பானத்தை நான் தான் குடிப்பேன் என்று கூறினார். இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களுக்கு இரக்கப்பட வேண்டும் என்று கூறியதால் விபரம் தெரியாத சிறுகுழந்தைகளின் உள்ளம் உணவை எதிர்பார்த்து ஏங்காமல் இருப்பதற்காக முத­ல் அக்குழந்தைகளுக்கு கொடுப்பதில் குற்றம் இல்லை.

சில ஊர்களில் பெரியவர்கள் முத­ல் உண்ட பின்பு தான் குழந்தைகள் உண்ண வேண்டும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்கள் பசியால் அழுது துடித்தாலும் அவர்கள் அதை கண்டுகொள்வதில்லை. இந்த இடத்தில் பெரியவர்களை விட சிறு குழந்தைகள் பலவீனர்களாக இருப்பதால் முத­ல் சிறுகுழந்தைகளுக்கு உணவை கொடுக்க வேண்டும். சிறியவர்களை விட பெரியவர்களை முற்படுத்த வேண்டும் என்ற ஒழுங்கு முறை சிறியவர்கள் குழந்தைப் பருவத்தைத் தாண்டி விபரம் தெரிந்தவர்களாக இருக்கும் போது தான். இன்னும் இந்தச் சட்டம் பெரியவர்களும் சிறியவர்களும் ஒரே நேரத்தில் இருக்கும் போது தான் பொருந்தும். பெரியவர்கள் விருந்திற்கு இன்னும் வரவில்லை என்ற போது சிறியவர்கள் காத்திருக்கு வேண்டியதில்லை.

 நன்றி : http://rasminmisc.blogspot.com/   &  ஹபில் ஸலபி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக